|
இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி. நிறுவனமான சத்யம் சட்டென்று சரிந்துவிட்டது. ஏழாயிரம் கோடி ஊழல் என்கிறார்கள். ஐம்பத்து மூன்றாயிரம் பேருக்கு வேலை போகும் அபாயம். இனி ஐ.டி. துறையின் எதிர்காலம் எப்படியிருக்கும்?
ஏற்கெனவே
கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நம்மூர் ஐ.டி. நிறுவனங்களுக்கு கஷ்ட
காலம்தான். ``பொருளாதார நெருக்கடி பற்றிய பேச்சு இப்போ கொஞ்சம்
அடங்கிட்டாலும், ஐ.டி. துறையில் அந்தப் பிரச்னை இன்னும் தீவிரமாகவே
இருக்கு. வெளிநாடுகளிலிருந்து வர்ற ப்ராஜக்ட்கள் நிறுத்தப்படுறதால்,
இங்குள்ள ஐ.டி. கம்பெனிகள் செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துலதான்
இப்பவும் இருக்குது. அடுத்தடுத்து அதிரடியா ஆள்குறைப்பு செய்றாங்க.
பதினைஞ்சு பேர் செய்ய வேண்டிய வேலையை வெறும் அஞ்சு பேர்கிட்ட கொடுத்து,
அவங்களாவே வெளியேறும்படி ப்ரஷரை ஏற்படுத்துறாங்க'' என தன் அனுபவத்தைச்
சொல்கிறார் சென்னையிலுள்ள ஐ.டி. நிறுவன ஊழியரான பட்டாபி.
கடந்த
இரு மாதங்களில் மட்டும் சென்னையிலுள்ள பெரிய ஐ.டி. நிறுவனக் கிளையில் 500
ஊழியர்களில் 300 பேர் வெளியேற்றப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
நம்மூர்
தகவல் தொழில்நுட்பத் துறை மக்களுக்கு லேட்டஸ்ட் தலைவலி, விரைவில் அமெரிக்க
அதிபர் ஆகப்போகிற ஒபாமா. அமெரிக்காவிலிருந்து `அவுட் சோர்சிங்' முறையில்
இந்திய நிறுவனங்களுக்கு வேலைகள் தருவதை அமெரிக்கர்களின்
வேலைவாய்ப்புகளுக்கு எதிரானதாகக் கருதும் ஒபாமாவின் கொள்கையால் இங்கே பல
திட்டங்கள் கேள்விக்கு உள்ளாகியுள்ளன.
இதற்கெல்லாம் அச்சாரமாக,
இந்தியர்கள் அமெரிக்காவுக்குப் போய் பணிபுரிவதற்கு வசதியான எச்1பி
விசாக்களை வழங்குவதில் அமெரிக்க அரசு சமீப காலமாக காட்டுகிற கண்டிப்பு நம்
பிழைப்பில் விழுந்த இன்னொரு பிடி மண்.
 ஆஸ்திரேலிய
ஐ.டி நிறுவனமான குவண்டாஸ், சத்யத்துக்குத் தரப்பட்ட சில ப்ராஜக்ட்களை
மறுபரிசீலனை செய்யவுள்ளதாக அடுத்த நாளே அறிவித்திருப்பது ஒரு அதிர்ச்சி
ரியாக்ஷன்.
``சத்யத்தின் ஊழியர்கள் வேறு வேலை தேடிப் புறப்பட்டால்,
ஐ.டி வேலைவாய்ப்புச் சந்தையில் நிலவும் போட்டி இன்னும் கடினமாகும்.
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரம் ஊழியர்களின் நிலைமை என்னவாகும்?
இதெல்லாம் ஐ.டி. நிறுவனங்களின் நம்பகத் தன்மைக்கு வேட்டு வைக்கும்'' என்று
சொல்கிறார் மைக்ரோசாஃப்ட்ஸ் குழுமத்திலுள்ள ஒரு நிறுவனத்தின்
நிதிஇயக்குனர் ஜான்பீட்டர். இந்த மாதத்திற்கான சம்பளத்துக்குக் கூட
வழியில்லாமல் சத்யம் நிறுவன ஊழியர்கள் நிற்கும் அவல நிலைமை, ஐ.டி துறை
மீது நம் இளைஞர்களுக்கு இருக்கும் `அட்ராக்ஷனை' மிச்சம் மீதியின்றி
சிதறடித்துவிட்டது என்பது முற்றிலும் உண்மை.
ஐ.டி ஜாம்பவான்கள்
கற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடி நேர பாடம் என்ன? ஒரு முன்னணி ஐ.டி
நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் பணிபுரிந்தவரும் தற்போது `மேட்ச்
பாக்ஸ் சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்துபவருமான வெங்கடசுப்ரமணியனிடம்
கேட்ட போது, ``மற்ற துறைகளை விட மிக நேர்மையான நிர்வாகத்தை நடத்துறதா ஐ.டி
கம்பெனிகள் ரொம்ப காலமா போட்ட கோஷம் இப்போ அம்பேல் ஆயிடுச்சு.
லாபத்துக்காக அவங்களும் பல தில்லுமுல்லுகள் பண்ணுவாங்க என்பது இப்போ
தெரிஞ்சுடுச்சு. அதற்கான ரகசியங்களைக் காப்பாற்ற ஐ.டி கம்பெனிகளின்
தலைவர்கள் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் மட்டும் உயர்மட்ட
நிர்வாகத்துல இடம்பெற வைப்பது, ஐம்பது பேர் செய்த வேலையை நூறு பேர்
செய்ததாகப் பொய்க் கணக்கு காட்டி வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் பணம்
கறக்குறது உள்ளிட்ட தகிடுதத்தங்களை இனிமேலாவது இந்த கம்பெனிகள்
நிறுத்திக்கணும்'' என்றார்.
``சத்யம் மாதிரியான ஐ.டி. நிறுவனங்கள்
ரியல் எஸ்டேட், இன்ஃப்ராஸ்டிரக்ச்சர் துறைகள்ல நுழைய நினைச்சது தப்பு
இல்லை. அதை சொதப்பாம செய்திருக்கலாம்'' என்ற விமர்சனமும் சிலரால் முன் வைக்கப்படுகிறது. நூற்றுக்கு நூறு சரி.
``மைக்ரோசாஃப்ட்ஸ்,
ஐபிஎம் உள்ளிட்ட வெளிநாட்டு கம்பெனிகள் எல்லாமே புதுசா ஒரு விஷயத்தை
உருவாக்கி, மார்க்கெட்டில் தங்களை தவிர்க்க முடியாதவங்களா ஆக்கிட்டாங்க.
வெறும் ஆள் பலத்தை மட்டுமே காட்டி, நம் இந்திய கம்பெனிகள் வெளிநாட்டுக்
காரங்களுக்காக இன்னும் கூலி வேலை பார்த்துக்கிட்டிருக்குது. இது ஒரு
கட்டடத்தை வடிவமைக்கிற ஆர்க்கிடெக்ட்டுக்கும் அவர் சொல்றதைச் செய்ற
சித்தாளுக்கும் உள்ள வித்தியாசம். இனி நம் ஐ.டி கம்பெனிகளும் புதுப்புது
சாஃப்ட்வேர்களை உருவாக்கணும்!'' என்று சொல்கிறார் `திங்க் சர்வ்'
சாஃப்ட்வேர் நிறுவனத்தின் விற்பனை இயக்குனர் பிரசாத்.
தடுக்கி
விழுவது தவறு அல்ல. அதை ஒத்துக்கொண்டு மீண்டும் எழுவதில் தான் வெற்றியின்
சூட்சுமம் இருக்கிறது. இது தனி மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், பெரிய
நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
- ஆனந்த் செல்லையா படங்கள் : ஆர்.சண்முகம் |